பிரித்தானியாவில் 45,000 குடியிருப்புகளை இருளில் தள்ளிய 6 பேர் கொண்ட கும்பல்!

பிரித்தானியாவில் 57 மைல்கள் தொலைவில் மின்சார கம்பிகளை திருடி சுமார் 45,000 குடியிருப்புகளை இருளில் தள்ளிய 6 பேர் கொண்ட கும்பலுக்கு நீதிமன்றம் சிறை விதித்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளில் குறித்த 6 பேர் கும்பல் Northern Powergrid மின்சார நிறுவனத்திற்கு சொந்தமான 92,000 மீற்றர் தாமிரத்தாலான மின் கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த 6 பேர் கும்பல் 2013 மற்றும் 2015 ஆண்டு காலகட்டத்தில் தனித்தனியாக சுமார் 250 முறை மின் கம்பிகளை திருடும் வழக்கில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கும்பல் திருடும் மின் கம்பிகளை குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

மேற்கு யார்க்ஷயரின் காஸில்ஃபோர்ட் பகுதியை சேர்ந்த இந்த கும்பல் வழக்கமாக நள்ளிரவில் கிராமப்புறங்களில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இதுவரை இந்த கும்பல் அந்த இரு நிறுவனங்களுக்கும் சுமார் 20,000 கிலோ அளவுக்கு தாமிர கம்பிகளை விற்பனை செய்துள்ளனர்.

இதனால் மொத்தமாக சுமார் 70,000 பவுண்டுகள் வரை இந்த 6 பேர் கும்பல் வருவாய் ஈட்டியுள்ளது என லீட்ஸ் கிரவுன் நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் குறித்த 6 பேர் கும்பலில் 32 வயதான ஜேமி டேவிஸ் என்பவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனையும், 37 வயதான லீ ராபின்சன் என்பவருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையும்,

34 வயதான டேவிட் சதர்ன் என்பவருக்கு இரண்டு வருடமும் பத்து மாதம் சிறைத்தண்டனையும், 30 வயதான ரிச்சர்ட் ஹார்பர் என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

திருட்டுப் பொருட்களை வாங்கிய குற்றத்திற்காக எஞ்சிய இருவருக்கு தலா மூன்றரை ஆண்டுகள் மற்றும் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!