முடக்கப்பட்டது எருக்கலம்பிட்டி!

மன்னார் – எருக்கலம்பிட்டி கிராமம் இன்று காலை முதல் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக கடந்த திங்கட்கிழமை மன்னார் எருக்கலம்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த 5 பேரில் 3 மகன்கள் மற்றும் மகளினுடைய கணவர் ஆகிய 4 பேரும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மகள் தம்பதெனியாவில் உள்ள கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

இவர்கள் கடந்த 27ஆம் திகதி திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தமையினால் குறித்த திருமண வீட்டிற்கு சென்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் ஆகியோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கை முடிவடையும் வரை மன்னார் எருக்கலம்பிட்டி கிராமம் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!