தியாகி திலீபன், மாநகர சபையில் மட்டுமன்றி எமது இனத்தின் அடையாளத்துக்கும் அப்பால் மனித குலத்திற்கே அடையாளமாகத் திகழ்ந்தார். போராட்ட வடிவத்துக்குத் தாமே சொந்தக்காரர் என்று மார்தட்டியோரைக் கிழித்தெறிந்து ஆகுதியாகிய ஒருவனுக்கே இன்று சிலை வைக்கப்படுகின்றதே அன்றி துவக்குத் தூக்கியவர்களுக்கெல்லாம், அரசியல் பேசியவர்களுக்கெல்லாம் சிலை வைக்கும் சபையாக மாற்றுமாறு கோரவில்லை. புனிதர்களை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் கன்னி அமர்வு சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. அங்கு கன்னி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழர் தம் தேசவிடுதலைக்காகத் தம்முயிரை உவந்தளித்த வீரமறவர்களை அவர் உரை ஆரம்பத்தில் நினைவுகூர்ந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தச் சபையை நம்பி யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில், வாழும் பொதுமக்களும், பல்லாயிரம் வர்த்தகர்கள், நிறுவனத்தினரும் உள்ளனர். அவர்களின் வரிப்பணத்திலும், பொதுமக்களின் மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட பணத்திலும் இந்தச் சபையின் பெயரில் பல கோடி சொத்துக்கள் உள்ளன. அவை மழையிலும் வெய்யிலிலும் பழைய இருப்பாகக் காணப்பட்டு சபை பஞ்சிகாவத்தை வியாபார சந்தைபோல் காட்சியளிக்கிறது.
சபையின் கடந்த ஆட்சியில் ஊழல் நடந்ததா என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். அது நல்ல அறிவிப்பு, ஆனால் விசாரணை நடத்த இந்தச் சபையின் ஆயுள்காலம் போதுமானதா என்று நான் அறியேன்.
இந்தச் சபையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற விதிமீறல் அல்லது முறைகேடு தொடர்பில் பட்டியலிட்டால் 30 நிமிடமும் போதாது. இருப்பினும், சபைக்கு வரவேண்டிய வருமானங்கள் பல தெரிந்தே இழக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக யாழ்ப்பாண நகரின் மத்தியில் முதலாம் மாடியில் இல.5 இல் இருந்த கட்டடம் தெரிந்துகொண்டே கட்சிசார் நிறுவனத்துக்கு 2014 ஒக்டோபரில் வழங்கப்பட்டது. 32 மாதங்கள் எந்த வாடகையும் செலுத்தாதபோதும் அதனை அறவிட எந்த நடவடிக்கையும் எடுக்கவோ, அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லவோ இல்லை. இதனால் சபைக்கு 10 இலட்சத்து 16 ஆயிரம் ரூபா வருமானம் இன்றுவரை செலுத்தப்படவில்லை.
அதேபோல் தமது புகழ்ச்சிக்காக சபையின் சொத்தை தவறாக வழங்கிய சம்பவங்களும் உள்ளன. உதாரணமாக சபையின் வட புறத்தே உள்ள முன்பள்ளிக் கட்டடத்தில் இயங்கிய ஆரம்ப சுகாதார நிலையத்தை வெளியில் வாடகைக்கு வீடு எடுத்து இயக்கியபோது சபையின் கட்டடம் இலவசமாக புலனாய்வாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் வெளியேறியபோதும் சபைக்கு அதிக செலவை வைத்துவிட்டே சென்றுள்ளனர்.
நகரைச் சீர்படுத்தவேண்டுமாயின் கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள் களையப்படவேண்டும். தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாகாண அமைச்சர்களின் மோசடிக் குற்றச்சாட்டுக் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை நடத்தியிருந்தார். அந்த அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே புதியதொரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கப்படவேண்டும். அந்தப் பரிந்துரைகளை எமது சபை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உரிய திணைக்களங்கள் ஊடாக விரைவாகச் செய்து முடிக்கவேண்டும்.
தவறினால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுவோம். இந்தச் சபையின் அனைத்து உறுப்பினர்களும் கடந்த கால மோசடி தொடர்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு எதிராக இருப்பார்கள் என்று எண்ணவில்லை. இதனைச் செயலுருப்படுத்தவேண்டியது இந்தச் சபையின் மேஜர் ஆனோல்ட்டின் கடமை – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!