குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மாயம் – பொலிசில் முறைப்பாடு.

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை மீண்டும் அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார்.

மேலும் குறித்த முறைப்பாடு தொடர்பில் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 18.01.2021 அன்று முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, படையினர் சகிதம் வருகைதந்து அங்கு தொல்லியல் அகழ்வுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிலையில் அங்கிருந்த முச்சூலம் உள்ளிட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அங்குள்ள மக்கள் மூலமாக எனக்கு தகவல் தரப்பட்டது.

அதேவேளை குருந்தூர் மலைக்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்களும் அங்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் என்னிடம் கோவில் நிவாகத்தினர் முறையிட்டிருந்தனர் .

இந்நிலையில் மக்களின் இந்த முறைப்பாடுகளுக்கமைய குருந்தூர்மலை ஆதிசிவன், ஐயனார் கோவிலுக்கு இன்று சென்றிருந்தோம். அப்போது மக்களால் முறையிடப்பட்டதைப் போலவே, அங்கு சென்ற எங்களையே அங்கிருந்த இராணுவத்தினர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாது தடுத்திருந்தனர். பின்னர் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டோம்.

இதனைவிட ஆலய நிர்வாகத்தினர், ஊடகங்கள் வாயிலாக அறிந்ததைப் போலவே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!