பளையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் சீனாவுக்கும் சிங்கள முதலாளிகளுக்கும்!

பளை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றுக்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இதற்காகவே, எல்.ஆர்.சி பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமாக 3,000 ஏக்கர் காணிகள், சீன நிறுவனத்திற்கும், சிங்கள முதலாளிகளிற்கும் அரசு காணி வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி எமக்கு கிடைத்துள்ளது. தமிழ் மக்களின் காணிகளை பறிமுதல் செய்து சீனக்காரரிற்கு கொடுக்க, சிங்களவர்கறிற்கு கொடுக்க முன்னாயத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

பளையில், புதுக்காட்டு சந்திக்கு அண்மையில் தேசிய காணி அபிவிருத்திசபைக்கு சொந்தமான 287 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் உள்ளன. அதை சிங்கள முதலாளிகளிற்கு கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் கேட்டும், அவர்களிற்கு வழங்காமல் சிங்கள முதலாளிகளிற்கு வழங்கப்படுகிறது.

அபிவிருத்தியென்ற பெயரில் தமிழர்களின் காணிகளை பிடுங்கி சிங்களவர்களிற்கு கொடுக்கும் நடவடிக்கையைத்தான் இந்த அரசாங்கம் மேற்கொள்கிறது. அரசாங்கம், இராணுவம் அனைவரும் கூட்டாக இதனை செய்கிறார்கள்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்ற முயல்வதும் இதற்குத்தான். இந்த மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வடக்கிற்கான பிராந்திய அலுவலகம் வடமத்திய மாகாணத்திற்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

பளையில் சீனா அல்லது வேறு நிறுவனங்களிற்கு காணி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காணி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களிற்கு காணி வழங்காமல் சீனா, சிங்களவர்களிற்கு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். இனிவரும் நாட்களில் பெரும் போராட்டங்களிற்கு தமிழ்மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய சூழலக்கு அரசு தள்ளுகிறது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!