சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற சந்தேகத்தில் கைதானோரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு!

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும் 7 பெண்கள் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களின் உறவினர்கள் எனவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமிடம் பயிற்சி பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டில் மாவனெல்லையில் கைது செய்யப்பட்ட யுவதி வழங்கிய தகவல்களுக்கு அமைய குறித்த விடயங்கள் தெரிய வந்துள்ளன.

மாவனெல்லை பகுதியில் கடந்த 19 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினாரால் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!