மூதூரில் 300 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை விகாரைக்கு அபகரிக்க முயற்சி! – பொதுமக்கள் எதிர்ப்பு.

திருகோணமலை, 64ஆம் கட்டை பகுதியில் உள்ள குட்டியாராம விகாரையை சுற்றி, நில அளவையாளர்கள் நேற்று மாலை அளவீடு செய்ய முற்பட்டபோது, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மூதூர் 64ஆம் கட்டை பகுதியில் மலை உச்சியில் குட்டியாராம விகாரை அமைந்துள்ளது. அதனைச் சுற்றி மக்களுடைய காணிகள் இருக்கும் நிலையில், விகாரைக்கு 300 ஏக்கர் காணி தேவைப்படுவதாகக் கூறி வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குட்டியாராம விகாரையை சுற்றியுள்ள மலைப்பகுதியை அளவீடு செய்வதற்கு தங்களது விருப்பத்தை தெரியப்படுத்தி இருந்தபோதிலும், தாம் குடியிருந்து வரும் காணிகளையும் சுற்றி அளவீடு செய்ய முயற்சிப்பதாகவும் இதனால் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு அளவீடு செய்ய வருகை தந்த நில அளவையாளர்கள் மீண்டும் திரும்பிச் சென்றதாகவும் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று பார்வையிட்டவும் தெரியவருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!