திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க நாளாக பிரகடனம்!

ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய சிவில் அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இதற்கு தமிழ் தேசிய கட்சிகளின் முழு ஆதரவு கிடைத்துள்ளது.

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் 01/04/2021 இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயர் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும்.

அவரின் இழப்பால் தமிழ்தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது.

2009ம் ஆண்டு யுத்தம் மெளனிக்கபட்ட பின்தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டபொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும்பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர். பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதி குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையைநாம் இன்று இழந்துநிற்கின்றோம்.

ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்றுமுதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்தேசம் எங்கும் துக்கதினங்களாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை (05/04/2021) தமிழ்தேசிய துக்க தினமாகவும் பிரகடனப்படுத்துகின்றோம்.

இதற்கு தமிழ்தேசிய கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டும், உங்கள் உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர்தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!