வெள்ளை மாளிகையில் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் கொடிகள்: வெளியான அதிர்ச்சி காரணம்!

அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர். இதன்பின்னர் காரில் இருந்து வெளியே குதித்த ஓட்டுனர் அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அதிகாரி ஒருவர் பலியானார். இதனை தொடர்ந்து கேபிடால் போலீசார் அந்த நபரை சுட்டு கொன்றனர்.

எனினும், தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவரவில்லை. அவரது தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை. ஆனால், வாஷிங்டன் பெருநகர காவல் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ கூறும்பொழுது, இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல என கூறியுள்ளார். ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக கேபிடால் கட்டிடம் முடக்கப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் உள்ளே இருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. இதேபோன்று கட்டிடத்திற்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் மர்ம நபர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் 18 ஆண்டு கால பணி அனுபவம் கொண்டவர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடனும் நானும் மனமுடைந்து விட்டோம் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அமெரிக்காவின் கேபிடால் பகுதியில் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடந்த வன்முறை தாக்குதலில் காவல் அதிகாரி வில்லியம் இவான்ஸ் கொல்லப்பட்டும், சக அதிகாரி உயிருக்கு போராடி வருகிறார் என்பது பற்றியும் அறிந்து ஜில் மற்றும் நான் மனமுடைந்து போனோம் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை கொடி கம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்ற உத்தரவையும் பைடன் பிறப்பித்து உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!