அழகிப் போட்டியில் குழப்பம் – பறிக்கப்பட்ட மகுடத்தை மீறப் பெறுகிறார் புஷ்பிகா!

திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட மகுடம் சில நொடிகளில் பறிக்கப்பட்டு, இரண்டாமிடம் பெற்றவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பறிக்கப்பட்ட மகுடத்தை மீண்டும் அவரிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரை தடாக அரங்கில் நேற்று முன் தினம்(04) இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த போட்டியில் திருமதி புஷ்பிகா டி சில்வா, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மகுடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது, போட்டியில் பங்குபற்றுபவர்கள் திருமணமானவராக இருக்க வேண்டும் என்றும் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என விதிமுறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகுடம் சூட்டப்பட்ட திருமதி புஷ்பிகா டி சில்வா, ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர் என்றும் இதனால் போட்டியில் வெற்றி பெற தகுதியற்றவர் என மீண்டும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, திருமதி புஷ்பிகா டி சில்வாவுக்கு சூட்டப்பட்ட மகுடம், மேடையிலேயே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டாவது இடத்தை பெற்ற திருமதி ருவந்திக்கு சூட்டப்பட்டது.

இந்த நிலையில், புஸ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதனால் அவருக்கே இந்த பட்டத்தை மீள வழங்க தீர்மானித்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!