வடக்கில் மேலும் 28 பேருக்கு தொற்று – ஒரே நாளில் யாழ்ப்பாணத்தில் 79 தொற்றாளர்கள்!

வடக்கில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்,யாழ்ப்பாணத்தில் மாத்திரம் நேற்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், ​வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இரண்டாம் தொகுதியில், யாழ்ப்பாணத்தில் 25 பேருக்கும், மன்னாரில் இருவருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர்களில் 17 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 607 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் 28 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதியில் நான்கு பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஏனைய நான்கு பேரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாநகர கடைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள்.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆறு பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தவர்கள்.

தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தோரின் மாதிரிகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றின் பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று காலை முதலாவது தொகுதி பிசிஆர் முடிவுகள் வெளியானது. அதில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது – இரண்டாம் தொகுதியில் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!