சமமான பிரதிபலன்களை வழங்கும் சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

அனைத்து தனிநபர்கள் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் சமமாக பயனளிக்கும் வகையில் சிறந்த தேசிய சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (07) நடைபெற்ற கண்டி மருத்துவ சங்கத்தின் 43 ஆவது வருடாந்த அமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வின் பிரதம விருந்தினராக பங்கேற்ற ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைக்கு அமைய ஆரோக்கியமான தேசத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

அதற்காக நீண்டகால பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளைக் கண்டறிய சுகாதார துறையினர் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதுவரை 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட கிராமத்துடனான கலந்துரையாடல் திட்டத்தில் கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தாம் கண்டறிந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சினைகளும் இதன்போது அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த குறைபாடுகளைத் தொடர அனுமதித்தால், கடுமையான பாதக விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!