கனடாவில் மாயமான 4,100 சிறுவர், சிறுமியர்: அதிர்ச்சி சம்பவம்!

பள்ளிக்குச் சென்றுவிட்டு பிள்ளைகள் வீடு திரும்பாமல் மாயமாகும் ஒரு நிலைமையை எந்த பெற்றோராவது நினைத்துக்கூட பார்க்க முடியுமா? அப்படி ஒரு கொடூரம் கனடாவில் நிகழ்ந்துள்ளது… ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் புதிதாக ஒரு கூட்டத்தினர் குடிபுகும்போது, அங்கிருக்கும் பூர்வக்குடியினர் ஓரங்கட்டப்படுவார்கள். ஒருவேளை, அவர்கள் கொல்லப்படலாம், அல்லது புதிதாக வந்தவர்களுக்கு அடிமைகளாக்கப்படலாம்.

இது காலம் காலமாக வரலாற்றில் நிகழ்ந்து வரும் ஒரு கொடுமை… ஆனால், பள்ளிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பூர்வக்குடியின பிள்ளைகள் காணாமல் போவதும், உயிரிழப்பதும் எத்தனை நாடுகளில் நிகழ்கிறதோ தெரியாது. ஆனால், கனடாவின் கருப்பு வரலாற்றில் அப்படி நிகழ்ந்துள்ளது.

Truth and Reconciliation Commission of Canada (TRC) என்னும் அமைப்பு, இப்படி மாயமான மற்றும் உயிரிழந்த 4,100 பேரை இதுவரை அடையாளம் கண்டுள்ளது. ஆனால், எத்தனைபேர் இதுவரை அப்படி உயிரிழந்தார்கள் என்ற உண்மையான எண்ணிக்கை இதுவரை யாருக்கும் தெரியாது.

உண்டுறை பள்ளிகள் எனப்படும் residential schools எனப்படும் பள்ளிகளில், இதுபோல் எக்கச்சக்கமான பூர்வக்குடியின மாணவ மாணவியர், பள்ளிக்குச் சென்றவர்கள் வீடுகளுக்குத் திரும்பவேயில்லை.

இந்நிலையில், சமீபத்தில், Kamloops Indian Residential school என்ற பள்ளி அமைந்திருக்கும் இடத்தில், ராடார் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த பகுதியில், 215 சிறுவர் சிறுமியரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவர்களில் மூன்று வயது சிறுவர் சிறுமியரும் அடக்கம். அவர்கள் எப்படி இறந்தார்கள், அவர்களது மரணம் குறித்து அவர்களது பெற்றோருக்குத் தெரியப்படுத்தப்படாதது ஏன் என்பதுபோன்ற கேள்விகளுக்கும் யாரிடமும் பதிலில்லை.

இந்த விடயம் கனடாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பிட்ட பள்ளி 1890 முதல் 1969 வரை இயங்கிய நிலையில், பின்னர் அதை அரசு பொறுப்பெடுத்துக்கொண்டுள்ளது. 1978இல் பள்ளி மூடப்பட்டுவிட்டது.

எனவே, இந்த குழந்தைகளின் மரணத்தின் பின்னணியில் இருப்போர் எத்தனை பேர் இப்போது உயிருடன் இருப்பார்கள், அவர்கள் மீது எப்படி, என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!