சீனாவை புரட்டி எடுக்கும் சக்தி வாய்ந்த புயல்: பலி 63 ஆக உயர்வு!

சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன. இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்து பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் ஏற்பட்ட மிக அதிகபட்ச மழை இதுவாகும். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் பலியானார்கள்.

அவா்களில் 12 பேர் சுரங்க ரெயில் பயணிகளும் அடங்குவா். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், இந்த பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33 ஆக உயா்ந்துள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவித்தது.

சீனாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக ரூ.75,000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மழையை முன்னிட்டு ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

மொத்தம் 12.4 லட்சம் பேர் மழை, வெள்ளத்திற்கு பாதிப்படைந்து உள்ளனர். சுரங்க பாதைகள், தெருக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன. இதனால் பொது போக்குவரத்து பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது.

இதேபோன்று, புத்த துறவிகள் சரணாலயங்களில் ஒன்றான சாவோலின் கோவிலும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கனமழை இருக்க கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது.

இதில், நேற்று (ஞாயிற்று கிழமை) வரையில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை இன்னும் காணவில்லை. 8.52 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

876.6 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 24,474 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதுபற்றி சீனாவின் ஹெனான் மாகாண நீர்வள துறை அதிகாரிகள் கூறும்போது, மாகாணத்தின் சில பகுதிகளில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பெய்யும் மழை அளவானது பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!