சீனாவை உலுக்கும் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 302 ஆக உயர்வு!

சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன. இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த வாரத்திற்கு முன்பிருந்து பலத்த மழை பெய்து வருகிறது.

வரலாறு காணாத கனமழையை பெற்ற அந்த மாகாணத்தின் ஜெங்ஜவ், ஜிங்ஜியாங், எனியாங் மற்றும் ஹெபி ஆகிய 4 நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. தவிர பல்வேறு நகரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழையானது 3 நாட்களில் பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனா மிக அதிகபட்ச மழையை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் பலியானார்கள். மொத்தம் 12.9 லட்சம் பேர் மழை, வெள்ளத்திற்கு பாதிப்படைந்து உள்ளனர். சுரங்க பாதைகள், தெருக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன. இதனால் பொது போக்குவரத்து பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது.

இந்நிலையில் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி மாயமான 50 பேரின் கதி என்ன? என்பது இன்னமும் தெரியவில்லை

அங்கு 9,72,100 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சீனாவில் மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள நேரடி வர்த்தக பாதிப்பு ரூ.ரூ.77 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!