ஹிஷாலியின் மரணம்- மௌனத்தைக் கலைத்தார் ரிஷாட்!

எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி இருந்தார், அவர், ஒரு பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த போது, எவ்வாறு துன்பப்பட்டடோமே, அவ்வாறான துன்ப, வேதனையை நாம் அனுபவிக்கிறோம் என் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

“எனது வீட்டில் தீப்பற்றி எரிந்து உயிரிழந்த ‘தங்கையின்’ மரணம் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பெரும் மன வேதனையளித்திருக்கிறது. எனது சகோதரி புற்றுநோயால் உயிரிழந்தபோது எனக்கும் எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அதே வேதனை தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

16 வயது பூர்த்தியடைந்த பின்னரே தரகர் ஊடாக எனது வீட்டுக்கு அந்த பிள்ளை வேலைக்கு வந்தார். பிள்ளையின் தங்குமிடம் தொடர்பிலோ அல்லது அவர் எங்கு வேலை செய்கிறார் என்பதுத் தொடர்பில் பிள்ளையின் பெற்றோர் வந்து பார்க்கவில்லை.

எனினும், அவர் தங்குவதற்கு 7×6 என்கிற அளவிலான சாதாரணமாக ஒருவர் தங்கக்கூடிய அறை ஒன்றையும், அதனுடன் இணைந்த மலசலகூடத்தையும் அவரின் பாவனைக்காக வழங்கியிருக்கிறோம் என்றார்.

கடந்த 10 வருடங்களாக எனது வீட்டில் வேலை செய்துவந்தவர்கள் அங்கே தங்கியிருந்தார்கள். காலை 6.45 மணியளவில் ஹிஷாலியின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த எனது மாமியும் மாமனாரும் எழும்பி வந்து பார்த்துள்ளனர். வயதான அவர்கள் அங்கிருந்த காபட்டை போட்டு தீயைக் அணைக்க பெரும் முயற்சி செய்தனர்.

அருகே இருந்த தண்ணீர் தடாகத்தில் பாயும்மாறும் கூறியுள்ளனர். அப்போது, ஹிஷாலி குடிப்பதற்கு கூல் தண்ணீரைக் கேட்டுள்ளார். அதனையும் அவ்விருவரும் வழங்கியுள்ளனர். அணைப்பதற்காக 10 – 15 நிமிடங்கள் சென்றுள்ளன. 7.33 மணிக்கே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

எனினும் பொலிஸார் 8.35 மணிக்கே அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள். எனது குடும்பத்தாருக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் எப்படி நடந்துக்கொள்வோமோ அதிலிருந்து ஓர் அணுவளவும் குறையாது, இந்த விடயத்திலும் எனது மாமனாரும் மாமியும் செயற்பட்டுள்ளனர்.

பின்னர் விடயம் அறிந்த மனைவி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். வைத்தியசாலைக்கு வைத்தியர்களும் பிள்ளையைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தனர். எனது பிள்ளைகள், மனைவி உள்ளிட்ட அனைவரும் ஹிஷாலினி உயிர் பிழைக்க வேண்டுமென நோன்பு நோற்றார்கள் என்றார்.

அந்த சகோதரி இறக்கும் வரையில், உயிரைக் காப்பாற்ற எனது குடும்பத்தார் போராடினார்கள். ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை பண்ண வேண்டும் அதற்காக சுமார் 7 – 8 இலட்சம் ரூபாய் செலவிட வேண்டுமென வைத்தியர்கள் கூறியுள்ளனர். அதற்கும் எனது மனைவி சம்மதம் தெரிவித்து, அந்த பணத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடக்கும்போது நான் வீட்டில் இல்லை. ஹிஷாலினின் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போதும் நான் வீட்டில் இருக்கவில்லை. ஹிஷாலினி வீட்டுக்கு வரும்போது தரகரிடம் நாங்கள் அவரின் வயதை வினவினோம் அவர் 17 வயது என்றார். எனினும், பின்னர் பிறப்புச் சான்றிதழைப் பார்த்து அவருக்கு 16 வயது என தெரிந்துக்கொண்டோம் என்றார்.

ஹிஷாலினி நல்ல பண்பான பிள்ளையாக இருந்தார். நாங்கள் உண்ணும் உணவையே கொடுத்தோம். அரசியல் வாங்குரோத்துடையவர்களும், ஊடக விபச்சாரிகளும் ஹிஷாலியின் தாயாரையும், சகோதரனையும் தவறாக வழிநடத்துகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தினார்.

எனது மனைவியும் பண்பானவர். ஹிஷாலியின் வீட்டுக்கு வந்த இரு நாள்களியே அவருக்கு 40 ஆயிரம் ரூபாயை வழங்கியிருந்தார். இதுவரையிலான 7 மாதங்களில் மாத்திரம் இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் இருந்தபோது ஒன்றரை இலட்சம் ரூபாயை வழங்கியிருந்தார் என்றார்.

ஹிஷாலியின் தயாரின் வேதனையில் பங்குக் கொள்கிறோம். ஆனால், அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். ஹிஷாலியின் மரணம் தொடர்பில் முழுமையான நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

அரசியல்வாதிகளிலேயே அதிகூடிய துன்பங்களை அனுபவிப்பவனான நான் இருக்கிறேன் என்றுக்கூறி தனதுரையை நிறைவுக்கு கொண்டுவந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!