நாளை வடக்கிலும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்! – ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ள நிலையில் இதற்கு எதிராக நாளை 16 தொழிற்சங்கங்கள் இணைந்து வடக்கிலும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளன.

பிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் இந்த அரசியல் ரீதியான நியமனங்கள் கல்வித்துறையை சீரழிக்கும் செயற்பாடாகும்.இத்தகைய நியமனங்களை எதிர்த்து இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை நாடுதழுவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இதன்போது, வடமாகாணத்தில் மத்திய கல்வியமைச்சின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. நாளை அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை மூலம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு கல்வித்துறையில் ஏற்படவுள்ள ஆபத்தைத் தவிர்க்க சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு முறையற்ற நியமனங்கள் எதிர்கால சமூகத்துக்கு ஆபத்தானவை என்பதை உணர்ந்து அன்றைய நாளில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பாது மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெற்றோர்கள் மேற்கொண்டு ஒத்துழைக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!