முல்லைத்தீவில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு -புதுக்குடியிருப்பு சந்தைக்கு பூட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தை, முல்லைத்தீவு சந்தை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகங்களில் 9 பேருக்கு கோவிட் தொற்று காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு சந்தை நடவடிக்கை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொதுச்சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அத்தொற்றாளர்கள் பலருடன் தொடர்புபட்டிருப்பதால் மேலும் பலருக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.கெங்காதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் நோய்த்தொற்றைத் தடுக்க பொதுச்சந்தைக்கு செல்வதைத் தவிர்க்குமாறும், அத்தியாவசிய தேவை தவிர வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கூட்டுச் சேராமல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீட்டில் இருக்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு சந்தை உள்ளிட்ட நகர்ப்பகுதியில் உள்ள வணிக நிலையங்களில் சீட்டுப் பிடிக்கும் நபர் ஒருவரும் இதற்குள் அடங்குவதால் அவர் பலருடன் தொடர்பினை பேணியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

எதிர்வரும் புதன் கிழமை புதுக்குடியிருப்பு சந்தை வணிகர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகச் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை முல்லைத்தீவு சந்தையில் வணிகர் ஒருவருக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் திட்டமிடல் கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கோவிட் தொற்று இனம் காணப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு மக்கள் செல்வதை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், திட்டமிடல் கிளையில் பணியாற்றும் 20 உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.