பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல்: ஒருவர் உடல் சிதறி பலி!

பிரித்தானியாவில் மருத்துவமனைக்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு டாக்சி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே ஒரு டாக்சி வெடித்தது. கார் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, நுழைவாயிலுக்கு வெளியே நடந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த பயணி ஒருவர் (ஆண்) பரிதாபமாக உயிரிழந்தார்.

டாக்சி ஓட்டுநர் என கூறப்படும் மற்றொருவர் காயமடைந்தார் என மெர்சிசைட் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் என நம்பப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக 29, 26 மற்றும் 21 வயதுடைய ஆண்கள், நகரின் கென்சிங்டன் பகுதியில் வைத்து பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கார் வெடித்ததைத் தொடர்ந்து தெற்கு லிவர்பூலில் உள்ள ஒரு வீட்டை ஆயுதமேந்திய பொலிஸார் சோதனை செய்ததாக தகவல் வெளியானதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையைச் சுற்றி, ஆயுதமேந்திய பொலிஸார் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!