கனடாவில் சுமந்திரனின் கூட்டத்தில் பதற்றம் – பொலிஸ் பாதுகாப்புடன் தப்பிச் சென்றார்!

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் பொதுமக்கள் இன உணர்வாளர்கள் திடீரென சுமந்திரனுக்கு எதிராக போராட்டத்தி ஈடுபட்டதால் மண்டபத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்க பயணத்தை அடுத்து. கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டுள்ளார்.

கனடா தமிழரசுக் கட்சி கிளை மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கிளை கனடிய தமிழ் காங்கிரசு ஆகியன இணைந்து ஒழுங்கமைத்திருந்த மேற்படி நிகழ்வில் மேற்ப்படி அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், கலந்துரையாடல் நடக்கும் மண்டபத்துக்கு வெளியேற நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து,45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது சமூக ஊடகங்கள் தமக்கான கேள்விநேரம் ஒதுக்கும்படியும் கேட்டிருந்தநிலையில் அதுவும் மறுதலிக்கப் பட்டு அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

TNA MPசாணக்கியன் பொது மக்கள் மத்தியில் ஆற்றிய உரை
பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்ததுடன் கேள்விகளை கேட்டோரை அப்புறப்படுத்தவும் முனைந்தனர்.

ஆயினும் அங்கே கூடியிருந்த 150 வரையானோரில் பாதிப்பேர் சடுதியாக எதிர்ப்பாளர்களாக மாறியிருந்ததால் நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவர எவராலும் முடியவில்லை. நிலைமையை உணர்ந்து கொண்ட பொலிசார் கைகலப்புக்கள் ஏதும் ஏற்படாது அமைதியானமுறையில் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு போராட்டத்தை தொடர அனுமதித்திருந்தனர். அதேவேளை சுமந்திரனையு மண்டபத்தைவிட்டு பாதுகாப்பாக வெளியேற பணித்திருந்தனர்.

இதையடுத்து பதற்றமான சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுமந்திரனை பொலிசாரின் பாதுகாப்புடன், மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!