ஊடகச் சட்டங்களை திருத்தப்போகும் இலங்கை அரசாங்கம்

இலங்கையில், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில், ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்நாட்டுச் சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இலங்கையில் ஊடக கொள்கையொன்றை தயாரிப்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் உட்பட்ட ஊடகங்களின் பயன்பாடு மற்றும் நடத்தை பற்றிய தொழில்சார் திறன்கள் மற்றும் கல்வியுடன் கூடிய ஊடகவியலாளர்களுக்கான பின்னணியை உருவாக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, ஊடகம், சந்தைப்படுத்தல், கல்வி, சட்டம், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் அனுபவமுள்ளவர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக ஊடகத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!