அப்பாவி மக்களை கொடூரமாக எரித்துக்கொன்ற மியான்மர் ராணுவம்!

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வரும் ராணுவம், இதுவரை 1,300-க்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளது.

இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் அதே வேளையில் ஒரு சிலர் ராணுவத்துக்கு எதிராக ஆயுதத்தை ஏந்தி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் மியான்மரின் வடமேற்கு பகுதியில் உள்ள மோனிவா நகரில் அணிவகுத்து சென்ற ராணுவ வாகனங்கள் மீது சிலர் கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தினர் 11 பேரை ராணுவ வீரர்கள் உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் மியான்மரில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது குறித்து ராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

முன்னதாக கடந்த 5-ந்தேதி யாங்கூன் நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவ வாகனம் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!