“ஒரு வாரத்தில் ஓமிக்ரான் பரவல் உச்சத்தை தொடும்” – கனடாவை எச்சரித்த தொற்றுநோயியல் நிபுணர்!

கனடாவில் ஓமிக்ரான் பரவல் லேசாக குறைந்து காணப்பட்டாலும், இன்னும் ஒரு வாரத்தில் அதன் உச்சத்தை தொடும் என்றே தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மனிடோபாவில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் விகிதம் தற்போது 48 சதவீதமாக உள்ளது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை மிக விரைவில் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
    
இதேப்போன்று வின்னிப்பெக்கில் அடுத்த 7 முதல் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிவடையும் என்றே தெரிய வருகிறது. கொரோனா பரவல் எப்போது உச்சம் அடையும் என கணிப்பது கடினம் என்பதுடன், உண்மையில் அந்த கட்டம் கடந்த பின்னரே அடையாளம் காண முடியும் என்கிறார் ரொறன்ரோ பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் கொலின் ஃபர்னஸ்.
இருப்பினும் சில அறிகுறிகளின் அடிப்படையில் தொற்று நோய் பரவல் உச்சம் அடைவதை கணிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த வாரம், அல்லது இரண்டு வாரங்களில், கனடாவின் பெரும்பாலான இடங்களில் கொரோனா பரவல் உச்சம் அடையும் என குறிப்பிட்டுள்ள அவர் சில வேளை, இன்னும் சிறிது நாட்கள் தாமதமாக கூட உச்சம் அடையலாம் என்று நான் யூகிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஓமிக்ரான் பரவல் உச்சம் கண்ட பின்னர், முடிவுக்கு வரும் என்றே தாம் நம்புவதாகவும், ஆனால் உச்சம் அடைந்த பிறகு என்ன நடக்கும் என்பதை கணிப்பது மிக மிக கடுமையான பணி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!