இளவரசர் சார்லஸின் மனைவிக்கு கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை சூடவுள்ள மகாராணி!

இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும்போது, ராணியாக மாறவுள்ள அவரது மனைவி கமிலாவுக்கு மகாராணி இரண்டாம் எலிசபெத் கோஹினூர் வைரம் கொண்ட கிரீடத்தை வழங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் ராணியாராக முடிசூடி 70 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், பிப்ரவரி 6-ஆம் திகதி அதற்கான ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    
அதேநேரம் நேற்று ஒரு முக்கியமான அறிக்கையொன்றை மகாராணியார் வெளியிட்டார். அதில், பிரித்தானியாவின் மன்னராக இளவரசர் சார்லஸ் முடிசூடும் போது, அவரது மனைவி கமிலா ராணியாராக பொறுப்பேற்பார் என அவர் தெளிவுபடுத்தினார்.

கடந்த பல ஆண்டுகளாக பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டுவரும் நிபுணர்கள் தரப்பு, சார்லஸ் மன்னராக முடிசூடும் போது கமிலா பார்க்கர் இளவரசியாக மட்டுமே அறியப்படுவார் என குறிப்பிட்டு வந்த நிலையில், இந்த அறிக்கை அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

இதையடுத்து, கமிலா பார்க்கர் பிரித்தானியாவின் அடுத்த மகாராணியாவது உறுதியான நிலையில், மற்றோரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் தாயான Queen Elizabeth The Queen Mother என்று அழைக்கப்படும் Elizabeth Angela Marguerite Bowes-Lyon-ன் கிரீடத்தை வழங்கவுள்ளார் என கூறப்படுகிறது.
சார்லஸ் மன்னராகும் போது கமிலாவின் தலையில் ராணி அன்னையின் பிளாட்டினம் மற்றும் வைர கிரீடம் வைக்கப்படும்.

இந்த கிரீடம் 1937-ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக உருவாக்கப்பட்டது. இதில், இந்தியாவின் கோஹினூர் (Kohinoor) வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!