சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமார்!

நில அபகரிப்பு வழக்கு, திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, சாலை மறியல் ஆகிய வழக்குகளில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையிலிருந்து விடுதலையானார்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர், ரூ. 5 கோடி மதிப்பிலான தன்னுடைய தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
    
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு நேற்று(மார்ச்-11) விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதுடன் இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்து வாரத்திற்கு மூன்று நாள்கள் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஏற்கெனவே திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, சாலை மறியல் என இரண்டு வழக்கில் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் பெற்றதால் இன்று ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுதலையானார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!