சமஷ்டி யாப்பு கொண்டு வருவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்!

இலங்கை அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டு வருவதனை தடுத்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டு வருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுத்தி இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
    
முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1987ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 13ஆம் திருத்தமானது, நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து அது தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை நிராகரித்து வந்துள்ளனர்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைபு சமர்ப்க்கப்பட்டிருந்த பொழுது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த தரப்புக்கள், அந்த வரைபை இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்றுகோரி இந்திய பிரதமருக்கு எழுத்து மூலமாக தெரிவித்திருந்ததும் வரலாற்று நிகழ்வாகும்.

13ஆம் திருத்தமானது சட்ட மூலமாக நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்துமாறு கோரப்பட்டதனுடைய நோக்கமே, 13 ஆம் திருத்தமானது, தமிழ் மக்களின் தீர்வு என்னும் விடயத்தில் ஆரம்பப் புள்ளியாகக் கூட கருதப்பட முடியாது என்பதனாலேயாகும்.

எனினும் தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், குறித்த 13ஆம் திருத்தச் சட்டமும் மாகாணசபைகள் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு அமைப்பு மட்டும் 1988இல் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வடகிழக்கு மாகாண சபையிலிருந்த நிர்வாகத்தைக் கைப்பற்றியிருந்தது.

இருந்த போதிலும் இதனூடாக எதனையுமே சாதிக்க முடியாது என்ற உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்த போது, மாகாண சபையை பொறுப்பேற்றிருந்த அந்தத் தரப்புக்கூட, தாம் வகித்துவந்த மாகாண சபை அங்கத்துவத்தினை இராஜினாமா செய்து 13 ஆம் திருத்தத்தினை முற்று முழுதாக நிராகரித்திருந்தனர்.

இந்த நடவடிக்கையானது, தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில், 13 ஐ முன்னிறுத்தி நகர முடியாது என்பதை நிரூபிப்பதாகவும், 13 ஆம் திருத்தமானது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஆரம்பப்புள்ளியாக கூட கருதமுடியாது என்ற யாதார்த்தத்தை மீண்டும் நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
34 வருடங்களுக்கு மேலாக இந்த 13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும், இலங்கை அரசியலமைப்பில் இருந்தும் கூட, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிராகரித்தே தமது ஏகோபித்த ஆணையை வழங்கி வருகின்றனர்.

தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – தமிழ்த் தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய – இணைந்த வடக்கு கிழக்கு தாயகம் பாதுகாக்கப்படுகின்ற சமஸ்டித் தீர்வையே கோரி வருகின்றார்கள்.

13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும் கடந்த 34 வருடங்களாக நடைமுறையில் இருக்கக் கூடியதாகவே, தமிழ் மக்களின் ஆணைகளைப் பெற்றவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் 13 ஆம் திருத்தம் ஒரு பேச்சுப் பொருளாகக் கூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

அந்தவகையில், கணக்கிலெடுக்கப்படாத – நிராகரிக்கப்பட்ட ஒரு விடயமாகவே தமிழ்த் தேசிய அரங்கில் 13ஆம் திருத்தம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அவ்வாறே இருக்கிறது. ஈழத் தமிழ்த் தேச மக்களின் நிலைப்பாட்டிலே, 13ஆம் திருத்தமும் மாகாண சபைகளும், தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்குரிய தீர்வு அல்ல என்பதுடன், அது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட அமையாது என்ற உண்மையை தொடர்ந்தும் நிரூபிக்கின்ற வகையிலேயே, கடந்த 2022 ஜனவரி 30ஆம் திகதி யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலும், 2022 மார்ச் மாதம் 13ஆம் திகதி வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு திடலிலும், மக்கள் எழுச்சிப் பேரணிகள் நடைபெற்றிருந்தன.


அதில், தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் அணிதிரண்டு, 13ஆம் திருத்தம் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியுமல்ல, இறுதித் தீர்வுமல்ல என்பதனை ஆணித்தரமாக வெளிப்படுத்தியும், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் வேலைத் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதேவேளை – தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – இணைந்த வடக்கு கிழக்கு தாயகத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியுள்ளதுடன், அத்தகைய தீர்வை அடைந்துகொள்ள இந்திய அரசும் எனைய நட்பு நாடுகளும் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் மேற்படி பேரணிகள் ஊடாக வலியுறுத்தியுள்ளார்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களது உரிமைக்காக போராடி வந்த காலப்பகுதியில், அவர்கள் நாட்டைப்பிரிக்காத, ஓர் சமஷ்டித் தீர்வுக்குத் தயாராக இருக்கவில்லை என்றும், தனிநாட்டிற்காக மட்டுமே பிடிவாதமாக செயற்படுகின்றார்கள் என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறியே, ஓர் இனவழிப்புப் போருக்கு இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று இனவழிப்பின் மூலமாக உரிமைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்திருந்தார்கள். போர் முடிந்த பின்னர், ஒற்றையாட்சியை நிராகரித்து, இலங்கைச் சட்டத்தின் பிரகாரம் நாட்டைப்பிரிக்காமல் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஓர் சமஷ்டித்தீர்வையே வலியுறுத்தி, தமிழ்மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள்.

இலங்கைக்கு நான்காவது புதிய அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டுவருவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள, இலங்கை அரசு, அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து புதிய அரசியல் அமைப்பை சமஷ்டி அரசியல் யாப்பாக கொண்டுவராமல், மாறாக ஒற்றையாட்சியாக கொண்டு வருவதற்கே நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழதமிழ்த் தேசம் உறுதியாக செயற்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேசமக்களின் நலன்களை பேணும் வகையில், இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டுவருதனை தடுத்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதனை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.

அந்த வகையில், “கிட்டுப்பூங்கா” பிரகடனமானது தமிழ் மக்களின் அசைக்க முடியாத அரசியல் வேணவாவை மீண்டும் வெளிப்படுத்தும் ஆவணம் என்னும் வகையிலும், இந்த விடயங்களை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்த சமயத்திலே, நாம் அவரை நேரில் சந்தித்து வெளிப்படுத்த காத்திருந்த நிலையில் எமக்கு அத்தகைய சந்தர்ப்பம் கிடைத்திருக்காத நிலையில், தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளை இக்டிகதம் ஊடாக கௌரவ வெளிவிவகார அமைச்சர் ஊடாக இந்திய அரசின் மேலான கவனத்திற்குக் கொண்டு வரவிரும்புகின்றோம் என்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!