ஜோன்ஸ்டன் போன்ற முட்டாள்களால் கோட்டாபயவின் கழுத்து அறுப்படும் நிலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அல்லது நாளை பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அதனை தவிர தீர்வுகள் எதுவுமில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

காணப்படும் நிலைமையின் கீழ் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்காக கூட அமர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த போன்ற முட்டாள்களுடன் இணைந்து பணியாற்றியதன் காரணமாகவே கோட்டாபய ராஜபக்சவின் கழுத்து அறுப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்றவர்கள் பழைய அரசியலை மீண்டும் செய்யலாம் என நினைக்கின்றனர். அது நடக்காது. இதன் காரணமாகவே நாடு பற்றி எரிந்தது. இவர்களுக்கு மக்களின் கஷ்டங்கள் புரியாது.

மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி, மருந்துகள் இன்றி வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது தவிக்கும் போது, இவர்கள் பலவந்தமாக மக்களின் வீதி போராட்டத்தை அடக்க முயற்சித்தனர்.

இதன் காரணமாக அவர்கள் வீடுகளை கூட இழக்க நேரிட்டது என்பதை மிகவும் கவலையுடன் நாங்கள் கூறிக்கொள்கிறோம். எனினும் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும், இது தொடர்ந்தால் நாடு ஸ்திரத்தன்மையை இழக்கும்.

நாட்டுக்கு தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை. தயவு செய்து உடனடியாக நாட்டின் ஜனாதிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பதவி விலக வேண்டும்.

இதனை தவிர வேறு தீர்வுகள் இல்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடைக்கால அரசாங்கம், கூட்டு அரசாங்கம் பற்றி சிந்திக்க முடியாது. இவர்கள் நடந்துக்கொண்ட விதத்திற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச இடத்திற்கு செல்லவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ எங்களால் முடியாது.

நாங்கள் மக்களுடன் இருப்பதே இதற்கு காரணம். உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிச் சென்றால், குறுகிய காலத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை நாடாளுமன்றத்தின் மூலம் நியமித்து, மிகவும் குறுகிய கால நிகழ்ச்சி நிரலின் கீழ் மக்களின் நிலைப்பாட்டை அறிய வேண்டும்.

தற்போது பல்வேறு குழுக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதுடன் பெயர்களையும் வெளியிட்டுள்ளனர்.

எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெரிவு செய்யும் பொறுப்பை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும் எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!