கர்ப்பமான 10 வயது சிறுமியின் கருவை கலைக்க மறுக்கும் அமெரிக்க மருத்துவமனைகள்!

அமெரிக்காவின் கருக்கலைப்பு சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஓஹியோவில் உள்ள 10 வயது சிறுமியின் கருவை கலைக்க அங்குள்ள மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு தொடர்பான 1973ம் ஆண்டு வழங்கப்பட்ட ரோ வி. வேட் வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் அமெரிக்க உச்சநீதிமன்றம் திரும்ப பெற்றது.
    
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 மாகாணங்களில் பெண்களின் கருக்கலைப்பு தொடர்பான தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 10 வயது சிறுமி 6 வாரம் 3 நாட்கள் கர்ப்பமாக இருந்துள்ளார், அதனைத் தொடர்ந்து கருவினை கலைப்பதற்காக அவர் ஓஹியோ மருத்துவமனைக்கு சென்ற போது 10 வயது சிறுமியின் கருக்கலைப்பிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயது சிறுமி ஓஹியோவில் மருத்துவமனையை அணுகிய போது அங்குள்ள குழந்தைகள் மருத்துவர், இந்தியானாவில் உள்ள மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் கெய்ட்லின் பெர்னார்ட்டைத் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்து கூறியுள்ளார்.

இதையடுத்து கருவை கலைப்பதற்காக இந்தியானா மாகாணத்திற்கு செல்லவேண்டிய நிலைமைக்கு அந்த 10 வயது சிறுமி தள்ளப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை நீக்கியதிலிருந்து கருக்கலைப்பு அணுகலைத் திரும்பப் பெற்ற பல மாநிலங்களில் ஓஹியோவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கருக்கலைப்பு தொடர்பாக கருக்கலைப்பு சட்டத்தை இந்த மாதத்தின் பிற்பகுதியில் இந்தியானா மாகாணமும் நிறைவேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!