அன்று வடக்கில் செய்ததை இன்று தெற்கு மக்களுக்கு செய்ய வேண்டாம்!

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அன்று வடக்கு மக்களுக்கு செய்ததை இன்று தெற்கு மக்களுக்கு செய்ய முற்பட வேண்டாம். போராட்டத்தை தவறாக சித்தரிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
    
பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகால சட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“போராட்டம் மற்றும் போராட்டகாரர்கள் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்பிடப்படுகிறது. போராட்டத்தை தவறான முறையில் சித்தரித்து முன்னோக்கி செல்வதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். முறைமை மாற்றம் (சிஷ்டம் சேன்ஜ்) போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்றமும் முழுமையாக மாற்றமடைய வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் தடாகத்தில் குளித்தமை தவறானது என ஆளும் தரப்பினர் பிரதம கொறடா குறிப்பிட்டார். அவ்வாறாயின் கப்பம் பெறல், மண் அகழ்தல், காடழித்தல் உள்ளிட்ட விடயங்கள் குற்றமில்லையா. மறுபுறம் போராட்டகாரர்கள் ஒழுக்கமற்ற வகையில் செயற்படுகிறார்கள் எனவும் குறிப்பிட்டார். நாட்டு மக்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கத்தை பற்றி கேள்வி கேட்கிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சகல பிரச்சினைகளுக்கும் பிரதான காரணியாக உள்ளது. அவசரகால சட்டத்தை பயன்படுத்தி வடக்கு மக்களுக்கு செய்ததை தற்போது தெற்கு மக்களுக்கு செய்ய முற்பட கூடாது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!