கிளர்ச்சிகளை ஒடுக்குமுறை மூலமே அடக்க முடியும்: நாமல் ராஜபக்ச

கிளர்ச்சிகள் உருவானால், அவற்றை ஒடுக்குமுறை மூலம் மாத்திரமே அடக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் சிறந்த பணிகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கூடியளவில் ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் சிறந்த அரசாங்கத்தை அமைத்து திட்டங்களை முன்னெடுத்து, நாட்டு மக்களின் தேவை பூர்த்தி செய்ய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் சூழலை உருவாக்கவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார். இதற்கான சூழலை ஏற்படுத்த மகிந்த ராஜபக்சவும் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரினர். கோட்டாபய விலகிய பின்னர் அடுத்த திட்டம் என்ன என்ற புரிதல் இவர்களுக்கு இருக்கவில்லை.
கோட்டாபய பதவி விலகினார், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார். தற்போது அவரது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

கிளர்ச்சி உருவானால், அதனை ஒடுக்குமுறை மூலம் மட்டுமே அடக்க முடியும் எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!