சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்! பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைப்பு

பொலன்னறுவை – சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையமாக இயங்கிவரும் பொலன்னறுவை, சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் புனர்வாழ்வு அளிக்கப்படுவதோடு, அதில் முதல் ஆறு மாதங்களுக்கு அவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பின்னர், இந்த கைதிகள் தொழில் பயிற்சிக்காக சேனாபுர தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அழைத்துவரப்படுவது வழமையாகும். எனினும் நேற்றும் இன்றும் சிலர் பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டுக்கு செல்ல விரும்புவதாக கூறி வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, ஒரு குழுவினர் தப்பிச் செல்ல முயன்று போராட்டத்தை ஆரம்பித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை கடந்த மாதம் 29ஆம் திகதி பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. இதன்போது பலர் தப்பியோடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!