அழகைக் காட்டி நேட்டோ அதிகாரிகள் உட்பட பலரை ஏமாற்றிய ரஷ்ய பெண் உளவாளி!

தன்னை ஒரு நகை வடிவமைப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு ரஷ்ய பெண் உளவாளி, நேட்டோ அதிகாரிகள் உட்பட பலரை 10 ஆண்டுகளாக தன் வலையில் வீழ்த்தியிருக்கிறார் என்னும் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2018ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள சாலிஸ்பரியில் ரஷ்ய முன்னாள் உளவாளியான செர்கே ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகளான யுலியா ஸ்க்ரிபால் ஆகியோருக்கு நோவிச்சோக் என்னும் விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    
அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 15ஆம் திகதி, இத்தாலியிலுள்ள Naples என்ற இடத்தில் வாழ்ந்துவந்த மரியா அடீலா குஃபெல்ட் ரிவேரா (Maria Adela Kuhfeldt Rivera) என்னும் அழகிய இளம்பெண், அவசர அவசரமாக இத்தாலியிலிருந்து விமானம் ஏறி ரஷ்யாவுக்கு பறக்கிறார்.
அதன் பிறகு மரியா என்ன ஆனார் என்பது அவரது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது!
பெரு நாட்டவர் என கூறப்படும் இந்த மரியா, ரோம், மால்ட்டா, பாரீஸ் என பல இடங்களுக்குச் சுற்றியிருக்கிறார். அவருக்கு நெருக்கமானவர்கள் பிரித்தானியா முதல் மத்திய கிழக்கு நாடுகள் வரை இருந்திருக்கிறார்கள்.

இத்தாலியிலுள்ள Naples என்ற இடத்தில் குடியமர்ந்த மரியா, அங்கு ஒரு பெரிய நகைக்கடையை திறந்திருக்கிறார். தானே வடிவமைத்ததாக அவர் கூறிய விலையுயர்ந்த நகைகள், அவரது மதுபான விடுதி ஆகியவை அவருக்கு பெரும் செல்வந்தர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
நேட்டோ அதிகாரிகள் பலரை தன் அழகைக் காட்டி வீழ்த்தியிருக்கிறார். அமெரிக்க கப்பல் படை அலுவலர் ஒருவர், தனக்கு மரியா மீது ஒரு கண் என்கிறார். நேட்டோ தலைமையகத்துடன் தொடர்புடைய லயன்ஸ் கிளப் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயலராகும் அளவுக்கு பிரபலமாகியிருக்கிறார் மரியா.

2012ஆம் ஆண்டு இத்தாலியர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார் மரியா. ஆனால், 2013ஆம் ஆண்டு அவரது கணவர் இறந்துவிட்டார். அதனால் ஏற்பட்ட பரிதாபமும் உதவ, நேட்டோ தூதர்கள் பலருடன் நெருக்கமாகியிருக்கிறார்.இப்படி பிரபலமாக, பெரும் செல்வந்தராக, 10 ஆண்டுகள் பல நாடுகளின் தூதர்கள், அதிகாரிகளுடன் நெருக்கம் காட்டி வந்த மரியா, செப்டம்பர் 15ஆம் திகதி, அவசர அவசரமாக இத்தாலியிலிருந்து விமானம் ஏறி ரஷ்யாவுக்கு பறக்கிறார்.

அதற்கு முன்தினம்தான் ரஷ்ய முன்னாள் உளவாளியான செர்கே ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகளான யுலியா ஸ்க்ரிபால் ஆகியோருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பின் மரியாவை யாரும் பார்க்கவில்லை.

இந்நிலையில், மரியா என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் Olga Kolobova என்றும், அவர் ஒரு ரஷ்ய உளவாளி என்றும் தெரியவந்துள்ளது.
தாங்கள் யாருடன் பழகுகிறோம் எனப்து தெரியாமலே ‘மரியாவுடன்’ நெருங்கிப் பழகிய நேட்டோ அதிகாரிகள் என்னென்ன தகவல்களை அவருடன் பகிர்ந்துகொண்டார்களோ தெரியாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!