“தேசிய சபை” அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

தேசிய சபை அமைப்பது தொடர்பிலான முன்மொழிவுகள் மீதான விவாதத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. சபாநாயகர் தலைமையில் இன்று காலை(14.09.2022)  இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைப்பதற்கு முன்மொழியப்பட்ட “தேசிய சபை” எனும் நாடாளுமன்ற நிர்வாகக் குழு முன்மொழிவுகள் இன்று நாடாளுமன்ற கோட்பாடு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

தேசிய சபை உறுப்பினர்கள்

குறித்த நிர்வாகக் குழுவின் தலைவர் பதவி சபாநாயகருக்கு உரித்தாவதுடன் ஏனைய பதவிகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளில் இருந்து ஒன்பதாவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 35 பேர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சி தலைவர், எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் குறித்த தேசிய சபையின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய சபையின் அதிகாரங்கள்

குறித்த தேசிய குழுவின் அதிகாரங்களுக்கு அமைவாக நீதிமன்ற நிர்வாகக் குழு, அரச நிதி தொடர்பான நிர்வாகக் குழு, அரச கணக்குகள் தொடர்பான நிர்வாகக் குழு, பொது வியாபாரம் தொடர்பான நிர்வாகக் குழு, வங்கி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவை தொடர்பிலான நிர்வாகக் குழு மற்றும் அரச நிதியை கட்டுப்படுத்தும் நிர்வாகக் குழுக்களின் முழுமையான அறிக்கைகள் மற்றும் தகவல்களை கோருவதற்கான அதிகாரம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!