சமூக பாதுகாப்பு வரியினால் பணவீக்கம் அதிகரிக்கும்!

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 2.5 சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கலாம். இந்த வரி மூலம் மக்களின் வரி சுமை நூற்றுக்கு 6 முதல் 10 வீதம் வரை அதிகரிக்கும் என பேராதனிய பல்கலைக்கழகபொருளாதார விஞ்ஞான பிரிவு பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தின்போது பிரேரிக்கப்பட்டிருந்த 2.5 சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 2022 வரவு செலவு திட்டம் ஊடாக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தி இருந்தது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வது மற்றும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே இந்த வரி விதிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
வருடாந்த வருமானம் 120மில்லியன் ரூபா பெறும் நிறுவனங்கள் பல்வேறு வகைகளில் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் என பல நிறுவனங்கள் இதில் உள்வாங்கி இருக்கின்றன.இதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கலாம் என எமக்கு எதிர்பார்க்க முடியும்.

அத்துடன் இந்த வரி 2.5 என விதிக்கப்பட்டாலும், இதன் மூலம் நுகர்வோருக்கு இந்த வரி வரும்போது உண்மையில் நூற்றுக்கு 6முதல் 10வரை அதிகரிக்க இடமிருக்கின்றது. இவ்வாறான வரிவிதிப்பை, வரிமேல் வரி விதிப்பு என்றே தெரிவிக்கப்படுகின்றது. அதாவது வருடாந்த வருமானம் 120மில்லியன் ரூபா பெறும் இறக்குமதியாளர்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அரசாங்கத்துக்கு 2.5 வரி விதித்தே குறித்த பொருளை இறக்குமதி செய்கின்றனர்.

பின்னர் அவர்கள் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு இந்த பொருளை விற்பனை செய்யும்போது 2.5 வரியை தங்களின் செலவினத்துக்கு சேர்த்துக்கொண்டே விற்பனை செய்கின்றார்கள்.அதேபோன்று சில்லறை வியாபாரிகள் அவர்களின் வருமானம் 120மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக இருந்தால் குறித்த பொருளுக்காக அரசாங்கத்துக்கு மீண்டும் 2.5 வரி செலுத்தவேண்டி ஏற்படுகின்றது.

இந்நிலையில் சில்லறை வியாபாரிகளும் குறித்த பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்யும்பாேது 2.5 வரியை தங்களின் செலவினத்துக்கு சேர்த்துக்கொண்டே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கின்றார்கள். அதனால் நாட்டுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பண வீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என எமக்கு எதிர்பார்க்க முடியும்.அத்துடன் இந்த வரியில் இருந்து விலக்களிக்கப்பட்ட சில துறைகளும் இருக்கின்றன. குறிப்பாக மருந்து பொருட்கள், எரிபொருள், எரிவாயு போன்ற பொருட்களுக்கு இந்த வரி விலக்களிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆனால் கல்வி நடவடிக்கைகள் போன்றன இந்த வரிக்கு உள்ளாகி இருக்கின்றன. குறிப்பாக சர்வதேச பாடசாலைகள் போன்ற இலங்கையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவ்வாறான நிறுவனங்களும் இந்த வரிக்கு உள்ளாகி இருக்கின்றன.இதன் காரணமாக தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுபவர்கள் குறித்த கல்வி நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய கட்டணமும் அதிகரிக்க இடமிருக்கின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!