உடனடியாக நிவாரணம் தேவைப்படும் 54 நாடுகளில் இலங்கை!

இலங்கைக்கும் உலகின் 53 நாடுகளிற்கும் உடனடியாக கடன் நிவாரணம் தேவைப்படுகின்றது என ஐ நா தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக இலங்கை உட்பட 54 நாடுகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களிற்கு உடனடியாக கடன் நிவாரணம் தேவைப்படுகின்றது என ஐ.நா தெரிவித்துள்ளது.

பல மூன்றாம் உலக நாடுகள் மிகவேகமாக தீவிரமடையும் கடன்நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அதனால் மோசமான விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
உடனடி கடன் நிவாரணம் இல்லாதபட்சத்தில் 54 நாடுகளில் வறுமை நிலை அதிகரிக்கலாம்,என தெரிவித்துள்ள ஐநா அமைப்பு காலநிலையை தழுவுதல் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தணிப்பது போன்ற விடயங்களில்இந்த நாடுகளிற்கு உடனடி முதலீடுகள் தேவைப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளும் உள்ளன என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரை சிறிதளவு நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை,ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன என ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி தீவிரமடைந்து உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஒரு வேரூன்றிய வளர்ச்சி நெருக்கடியாக பரவும் ஆபத்துள்ளது வறிய கடனாளி நாடுகள் ஒன்றிணைந்து வரும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் பெருந்தொற்றிற்கு முன்னரே பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் கடன் நெருக்கடி உருவாக தொடங்கியிருந்தது கடந்த தசாப்தத்தில் கடன் துரிதமாக அதிகரித்து வந்துள்ளமை தொடர்ச்சியாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!