இலங்கையில் பணமின்மையால் நிராகரிக்கப்படும் காசோலைகள்! பாரிய பிரச்சினை என தகவல்

இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் சுமார் 60 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வங்கியில் பணமின்றி இந்த காசோலைகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாரியளவிலான தொகை காசோலைகள் நிராகரிக்கப்பட்டமை பாரிய பிரச்சினை என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் முஹீட் ஜீரான் தெரிவித்துள்ளார்.


இதனால் அநேகமான வியாபாரங்கள் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2022ம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு பகுதிகளில் சுமார் 250,000 காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளன.இந்த காசோலைகளின் மொத்தப் பெறுமதி 59.6 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.

காசோலை நிராகரிப்பு சந்தர்ப்பங்கள் முதலாம் காலண்டில் 2.1 வீதமாக காணப்பட்டதாகவும் இரண்டாம் காலாண்டு பகுதியில் இது 3.2 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்தம் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் நிராகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!