அரசியல்வாதிகளின் கொள்கைகள் ஆளுமையில் வெளிப்படாமையே அரசியலின் மோசமான நிலை – ஜனாதிபதி

இன்று சில அரசியல்வாதிகளின் கொள்கைகள் அவர்களது ஆளுமைப் பண்புகளில் வெளிப்படாத காரணத்தினால் அரசியல் துறையில் மோசமான நிலையேற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சமூகத்தில் ஒருவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் கௌரவத்திற்கு அவரது கொள்கைகளும் ஆளுமை பண்புகளும் ஒரே வழியில் பயணிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகையின் ஆயர் பதவியில் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னாள் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை சமூகத்தில் உயர்ந்த கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கு அவரது கொள்கையும் ஆளுமை பண்புகளும் ஒரே வழியில் பயணித்தமையே காரணமாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று சில அரசியல்வாதிகளின் கொள்கைகள் அவர்களது ஆளுமைப் பண்புகளில் வெளிப்படாத காரணத்தினால் அரசியல் துறையில் ஏற்பட்டிருக்கும் மோசமான நிலை குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மக்களோடு மக்களாக வாழ்கின்ற உண்மையான மனிதர்கள் எப்போதும் அடுத்தவர்களின் அன்புக்கும் கௌரவத்திற்கும் உரியவர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

இன, மத பேதங்களின்றி அனைத்து மக்களுக்காகவும் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை சமய மற்றும் சமூக ரீதியாக மேற்கொண்டுவரும் பணிகளை ஜனாதிபதி பாராட்டினார்.

இந்நிகழ்வின் விசேட உரையை பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்க நிகழ்த்தினார்.

அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரர், கோட்டே ஸ்ரீ கல்யானி சாமக்ரீ தர்ம மகாசங்க சபையின் மகா நாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், பேராயர் திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் திரு.பியரே வென்டொட், சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!