தமிழ் பிரதேசங்கள் பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கப்படுகிறதா..! செல்வம் அடைக்கலநாதன் கேள்வி

  எல்லை நிர்ணயம் மூலம் தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியாவில் பல கிராமங்களை அனுராதபுரத்துடன் இணைக்கும் செயற்பாடாகவும், திருகோணமலையின் சில பிரதேசங்களை பொலனறுவையுடன் இணைக்கும் செயற்பாடாகவும், தமிழ் பிரதேசங்கள் பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுக்குள் உள்வாங்குவதற்கான செயற்பாடாகவும், எங்களது பிரதேசங்களை காவு கொள்ளக்கூடிய நிகழ்ச்சி நிரலிலே எல்லை நிர்ணயம் இடம்பெறலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

இந்த எல்லை நிர்ணயம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இருப்பதோடு இது தொடர்பாக மக்களுடனும், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அத்துடன் ஐந்து பேரை உள்ளடக்கிய எல்லை நிர்ணய குழு தனித்து, தன்னிச்சையாக தங்களது முடிவினை எடுத்து செயற்படுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டோம்.

மேலும் இதன் ஊடாக நகரசபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களினை பிற்போடுவதற்கான நிலையும் காணப்படுகின்றது. அத்துடன் தற்போது நகரசபை மாநகரசபையாகவும், பிரதேசசபைகள் நகரசபைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.எல்லை நிர்ணம் செய்யாமல் எவ்வாறு சபைகளை தரமுயர்தினார்கள் என்பது கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எல்லை நிர்ணயத்தை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடத்தி முடித்து தேர்தலை நடத்துவதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.

காலத்தை பின்னடிக்காது உடனடியாக ஒரு கால எல்லைக்குள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு அதனை மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் காணப்பித்து தேர்தலை நடத்த வேண்டும். மக்களது பொதுவான அபிப்பிராயத்தை பெறுவதற்காக தேர்தல்களை பின் போடாது நடத்துவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். மஹிந்த ராஜபக்ஸவினர் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீள தமது செல்வாக்கை நிலைநிறுத்த முற்படுபகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் சனநாயகத்தை பேசிக் கொண்டு அவர்கள் சொல்லும் செயற்பாட்டை செய்யக் கூடாது.

அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு பலரிடம் இருக்கின்றது. இதனை ஜனாதிபதி மாற்ற வேண்டும்.இது தவிர, மஹிந்த அமரவீர அமைச்சர் கடந்த 23 ஆம் திகதி வவுனியாவிற்கு விஜயம் செய்தார். விவசாய அமைப்புக்களை அழைத்து வனவளத்திணைக்களங்களின் காணிகளில் உழுந்து சாகுபடி செய்யலாம் என ஆசை வார்த்தை கூறினார்.

தற்போது காணிகளை துப்பரவு செய்து விவசாயிகள் உழும் மட்டும் பொறுமையாக இருந்த வனஇலாகா அவர்கள் உழுத பின் அதில் காட்டு மரங்களை நடும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. இதனை ஏற்க முடியாது. இது பற்றி பாராளுமன்றத்திலும் பேசுவோம். பணத்தை செலவு செய்து உழுத பின் வன இலாகா செய்யும் செயற்பாடு ஏற்க முடியாது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.வனஇலாகா வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சர் மௌனம் காட்டாது உடனடியாக இந்த விடயத்தில் கவனம் செலுத்தி விவசாயிகளுககு தீர்வைப் பெற்றுப் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!