தனுஷ்க குணதிலக்க சந்தேகநபராக மட்டுமே உள்ளார்: அமல் ஹர்ஷ டி சில்வா

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் குற்றச்சாட்டில் இதுவரை சந்தேகநபராக மட்டுமே உள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக இலங்கை தனது அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும்.

தனுஷ்க குணதிலக்க ஒரு கிரிக்கெட் வீரர், அவர் விளையாட்டு அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டவர். எங்கள் பொறுப்பில் இருந்து நாங்கள் தப்பிக்க முடியாது, தனுஷ்க குணதிலக்கவுக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தால், நாங்கள் அவருக்காக முன்னிலையாக வேண்டும்.அவர் தனது விருப்பத்துடனும் அறிவுடனும் இந்த தவறை செய்திருந்தால், அவருக்கு வழங்கப்பட்ட சட்ட உதவிக்கான அனைத்து செலவுகளையும் அவர் செலுத்த வேண்டும்.

பொதுப் பணத்தைச் செலவழித்து, அவரது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு உதவ எங்களுக்கு அதிகாரம் இல்லை. தனுஷ்க மீது குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன. எனவே அவர் இன்னும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால் அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால், அவரே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.இந்நிலையில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர் இலங்கை கிரிக்கெட்டால் மேற்கொள்ளப்படும் அனைத்து செலவுகளையும் தீர்க்க வேண்டும்.விளையாட்டு என்று வரும்போது ஒழுக்கம் அவசியம் என்றும் சில்வா வலியுறுத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!