வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது!

75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
    
பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் உருவாக்கப்பட்டிருந்தால், நாடு சர்வதேச மட்டத்தில் சிறந்த அங்கீகாரத்தை பெற்றிருக்கும்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்கினார்.

யுத்தத்தில் அடைந்த வெற்றியை தொடர்ந்து அவர் இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பது தொடர்பில் அக்கறை செலுத்தினாரே தவிர சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தயாரிக்கப்பட்ட சர்வ கட்சித் தலைவர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துவதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டிய நியாயமான தீர்வுகள் காலம் காலமாக தாமதப்படுத்தப்பட்டு வருகின்றமை முற்றிலும் தவறானதாகும்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அக்கறை கொள்ளவில்லை. பதவி வகித்த இரண்டரை வருட காலத்தில் ஒரு முறை கூட அவர் வடக்குக்கு விஜயம் செய்யவில்லை.

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுபவர் பதவிக் காலத்தில் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன்.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நடைமுறைக்கு பொருத்தமான பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். அரசியல் பழிவாங்கலுக்காகவே பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது பயன்படுத்தப்படுகிறது.ஆகவே, பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்துசெய்யப்பட்டு நவீன மனித உரிமை கொள்கையை அடிப்படையாக கொண்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!