உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதில் தாமதம்! வருத்தத்தை தெரிவித்த இலங்கை பொலிஸ் மா அதிபர்கள்

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன மற்றும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க ஆகியோர் நேற்று உயர் நீதிமன்றத்தில் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். 

உப பரிசோதகர் சுகத் மெண்டிஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதற்கே இருவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக பொய்யான சாட்சியங்களை உருவாக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகரவுக்கு உதவிய குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து சுகத் மெண்டிஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்து, நிலுவையில் உள்ள ஊதியத்தை அவருக்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் 8ம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளை பரிசீலித்த உயர் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன மற்றும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்கவேண்டும் என்று முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே நேற்று அவர்கள் இருவரும் முன்னிலையாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!