மகிந்தவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வசூல் வேட்டை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று பாலூட்டும் தாய்மாருக்கு தானம் வழங்குதல் மற்றும் ஆசி வழங்கும் பிரித் ஓதல் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சிக்காக மொட்டுக்கட்சியை சேர்ந்த அமை்சசரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களிடம் தலா இரண்டு லட்சம் ரூபாவும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்களிடம் தலா ஒரு லட்சம் ரூபாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புண்ணியதானத்திற்கு தேவையான பொருட்களை வழங்கும் பொறுப்பு மாகாண மற்றும் பிரதேச சபை மட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நிகழ்வு சம்பந்தமாக கடந்த வாரம் மொட்டுக்கட்சியின் 60 உயர் மட்டப்பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் அந்த கூட்டத்தில் 30 பேர் மட்டுமே கலந்துக்கொண்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஏனையோர் பணத்தை அனுப்பி வைத்திருந்தாக கூறப்படுகிறது.
பிறந்த தின நிகழ்வை மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் பிரபல முன்னாள் அமைச்சர் உட்பட சிலர் ஏற்பாடு செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 



* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!