சாணக்கியனுக்கு சீனா வழங்கியுள்ள பதிலடி

இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில், இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் உரையாற்றிய போது, சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. உண்மையான நண்பராக இருந்தால், ஏன் சர்வதேச நாணய நிதிய கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா உதவவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் குறித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், சீனத் தூதரகம் டுவிட்டரில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில் மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புகளை நாம் ஊக்குவித்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருகிறது.

நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாக பங்கேற்றது. சீனாவின் நிதி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியை தாமதமின்றி தொடர்பு கொண்டது. மேலும், பல்வேறு வங்கிகளின் பணிக்குழுக்கள் நாட்டிற்கு பயணம் செய்து வருவதுடன், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!