அடுத்த ஆண்டு இரண்டு முறை அதிகரிக்கப்படவுள்ள மின்சார கட்டணம்

அடுத்த வருடம் ஜனவரி முதல், மின்சார கட்டணங்கள் மேலும் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கமைய இந்த விடயம் குறிப்பிடப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைக்கமைய, இந்த விலை அதிகரிப்பை அமுல்படுத்த நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 160 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் 2023 ஆம் ஆண்டில் 340 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மின்சார கட்டணத்தை 70 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று மின்சார சபை அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளது.

ஆனால் அரசாங்கம் மின்சார கட்டணத்தை 30 சதவீதம் வரை அதிகரிக்க அனுமதி வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படும். அந்த கட்டண அதிகரிப்பை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. இந்த ஆண்டு 75 சதவீதம் வரை மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!