தேசிய பிரச்சினைக்கு தீர்வுகான பேச்சுவார்த்தை நடத்திய அரசியல்வாதிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் கொழும்பில் நேற்று (08.12.2022) 45 மணி நேரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கும் வழிவகைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உத்தேச பேச்சுக்களை ஒட்டிய தமிழர் தரப்பின் ஒன்றுபட்ட கருத்து நிலைப்பாட்டை  இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.,
அரசமைப்புக் கவுன்சிலுக்கு ஏழாவது உறுப்பினரை நியமிப்பது தொடர்பில் பேரினவாதத் தரப்புக்கள் எப்படி நடந்து கொண்டன என்பதை பற்றியும் அவர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ஆம் திகதி பேச்சுக்கள் ஆரம்பமாகும் போது, சமாதான முயற்சிகளுக்கு எதிரான தீவிர பேரினவாதக் கருத்துக்கள் இத்தகைய சக்திகளால் நிச்சயம் முன்வைக்கப்படும், அவற்றைப் புறம் ஒதுக்கிவிட்டு, முன்நகரும் அரசியல் தற்றுணிவும் திடசங்கற்பமும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இருந்தால் மட்டுமே இந்த விடயத்தை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க முடியும்.

ஒருபுறம் பேச்சு நடக்கும் அதேசமயம், மறுபுறத்தில் மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்தி, அரசமைப்பு ஏற்பாடுகளில் ஏற்கனவே உள்ளவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான் இந்தச் சமரச முயற்சியில் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் நம்பிக்கை பிறக்கும்.

உத்தேசப் பேச்சு முயற்சியை விரைந்து முன்நகர்த்துவதற்கு எங்கிருந்து அதனை ஆரம்பிப்பது, அதன் பாதை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் 13ஆம் திகதி தாம் கூட்டியுள்ள சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, அடுத்த கட்ட நகர்வை உறுதி செய்யலாம் என் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பின் முடிவில் குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!