இந்தியாவின் அனுசரணையுடனேயே அரசுடன் பேச வேண்டும்!

தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
    
இலங்கை தமிழரசு கட்சியின் 75ஆவது ஆண்டு ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கைக்கு 1948ஆம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கின்ற போதும் தமிழர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது இலங்கையில் தமிழர்கள் ஆட்சி செய்த நிலங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அது சிங்களவர்களுக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்கள் சுதந்திர தமிழர்களாக இருக்க வேண்டும் என்றும் அதற்காகவே அன்று 1948ஆம் ஆண்டிலேயே தந்தை செல்வா தனது அஹிம்சை வழியிலான போராட்டத்தை ஆரம்பித்து ஆரம்பித்திருந்தார். அதன் 75 ஆண்டுகள் நிறைவடைகின்றது என்று குறிப்பிட்ட அவர், இலங்கையில் தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க வின் கட்சி சிதைந்து தேசிய பட்டியலில் பாராளுமன்றத்துக்கு சென்று பிரதமராகி ஜனாதிபதியாகி இருக்கின்றார்.

இந்த நிலையில், பேச்சு வார்த்தை மூலம் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அழைத்திருக்கின்றார். தமிழ் மக்களுடைய விடுதலையை நேசிக்கின்ற ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் பேச வேண்டும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!