சொல்ஹெய்முக்கு ஐக்கிய மக்கள் சக்தி வாக்குறுதி!

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் உறுதியளித்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
    
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடைமுறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முன்னேற்றகரமானதாக உள்ளது. இதனை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார். சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவிற்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் வினவிய போது பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, காலநிலை மாற்றத்தினால் இலங்கை பாரிய நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. மனித செயற்பாடுகள் காலநிலை மாற்றம் மற்றும் அதனுடனான தாக்கங்களை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மீள்வதற்கு முறையான திட்டம் இதுவரை வகுக்கப்படவில்லை என்பது இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
நீர்கொழும்பு பகுதியில் உள்ள களப்பு பகுதிகளை பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரிடம் எடுத்துரைத்தோம். இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தமிழ் மக்களுடன் இனக்கமாக செயற்பட்டதை எரிக் சொல்ஹெய்ம் இதன் போது நினைவுப்படுத்தினார். ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என வாக்குறுதி வழங்கினோம். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடைமுறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முன்னேற்றகரமானதாக உள்ளது. இதனை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!