தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது!

இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
    
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தீர்வு விடயத்தில் பெரும்பான்மையின கட்சிகள் எதிர்ப்பினை வெளியிடவில்லை என கூறினார். ஐ.நா. உட்பட உலக நாடுகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எவ்வாறாயினும் தமிழர்களுக்கான தீர்வு குறித்த விடயத்தில் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதால் நியமன தீர்வு கிடைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை பல்லின அடையாளங்களை கொண்ட நாடு என்பதால் அனைத்து இனங்களின் அபிலாஷைகளும் பூர்த்தி செய்யப்படும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.