ஒன்றும் விளங்காத சிறியவர் சாணக்கியன்! விக்கி பதிலடி

“என்னைவிட இரண்டரை மடங்கு வயது குறைந்த சாணக்கியன் எம்.பி. ஒன்றும் விளங்காமல் புலம்பியுள்ளார்” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,
“நான் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சாணக்கியன் குறிப்பிட்டார் என்று சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். அவர் சிறியவர். அப்படித்தான் பேசுவார். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை. நான் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியமை சிறுபிள்ளைத்தனம் என அவர் (சாணக்கியன்) சொன்னாராம்.

ஆனால், அந்தக் கடிதம் எழுதியதால் பல விடயங்கள் நடந்துள்ளன. நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் சுமந்திரன் தொலைபேசியில் அழைத்து ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் என்றார். போதிய அவகாசம் வழங்காமல் சந்திப்பு திகதி குறிப்பது பொருத்தமற்றது என ஜனாதிபதிக்கு நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதம் அனுப்பியதன் பின்னர்தான் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சொன்னார்கள், அந்தச் சந்திப்பு ஜனாதிபதி திட்டமிட்டதல்ல, நாங்கள் சந்திக்க வரலாமா எனச் சுமந்திரன் கேட்டுள்ளார், சரி,கேட்கிறீர்கள் வாருங்கள் என்றுதான் ஜனாதிபதி கூறியுள்ளார்.


ஜனாதிபதி அழைக்கின்றார் என எமக்குச் சுமந்திரன் சொன்னார். அதையும் நாங்கள் யாழ்ப்பாணம் வந்த பின்னர்தான் சுமந்திரன் அழைப்பு விடுத்தார். நாங்கள் சந்திப்புக்கு வரக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படி செய்திருக்கின்றார். நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு அனுப்பப்பட்ட பதிலில் சுமந்திரன் கேட்ட சந்திப்பு உத்தியோகப்பற்றற்றது எனவும், ஜனவரி முதல் வாரத்தில் திட்டமிட்டுள்ள சந்திப்புக்கு போதிய அவகாசத்துடன் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தாலேயே இதெல்லாம் நடந்துள்ளது. என்ன விட இரண்டரை மடங்கு வயது குறைந்த சாணக்கியன் இவையெல்லாம் விளங்காமல் புலம்பியுள்ளார்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!