தீர்வுப் பேச்சு தொடர்பில் முஸ்லிம் மக்கள் மத்தியில் விஷமத்தனமான பிரசாரம்: ஹக்கீம்

இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்கின்ற பேச்சு சம்பந்தமாக விஷமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி, மக்களைக் குழப்பி ஒட்டுமொத்த இனப்பிரச்சினைக்கான தீர்வு வருகின்ற சாத்தியப்பாட்டை குறைக்க முயற்சிக்கும் விடயமாகவே இதனைத் நான் உணர்கின்றேன்.

அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் விவகாரத்தில் சகல தரப்புகளும் இணங்குகின்ற நல்லதொரு தீர்வைமிக விரைவில் பெற்றுத்தறுவதற்கான முயற்சியை ஜனாதிபதி உளப்பூர்வமாக முன்னெடுப்பதாக இருந்தால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

அரசமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பாகவும் ஜனாதிபதி தமிழ்க் கட்சிகளுடனும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது சம்பந்தமாக விஷமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரியது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாஷைகளுடன் முரண்பட்ட விடயங்களாக இருக்கின்ற போது, தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி, மக்களைக் குழப்பி ஒட்டுமொத்த இனப்பிரச்சினைக்கான தீர்வு வருகின்ற சாத்தியப்பாட்டை குறைக்க முயற்சிக்கப்படுகின்ற விடயமாகவே நான் உணர்கிறேன்.

அதனடிப்பையில் ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக ஆக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பிலே நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்ட விடயமாக இருந்த போதிலும் அதிலே முஸ்லிம் தரப்பு சற்று மாற்றமான கருத்தைக் கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தத்தைத் தமிழ்த் தரப்பு புரிந்துகொண்டிருக்கும் என நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலே இந்த விவகாரத்திலே தேவையற்ற விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொள்ளாமல், அரசோ, தமிழ்த் தரப்போ இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கின்றபோது இந்த விவகாரத்தில் கரிசனை உடைய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இதற்கான தீர்வுகளைக் காண்பார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

அதனால் பிரச்சினைக்கான தீர்வு வருகின்ற போது அதனை இவ்வாறான விஷமத்தனமான பிரசாரங்கள் மூலம் குழப்பியடிக்க முனையாமல் இணக்கப்பாட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றன.

எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விவகாரத்தில் சகல தரப்புகளும் இணங்குகின்ற நல்லதொரு தீர்வை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கான முயற்சியை ஜனாதிபதி உளப்பூர்வமாக முன்னெடுப்பதாக இருந்தால் முஸ்லிம் தரப்பையும் இதில் இணைத்துக்கொண்டு இந்த விவகாரத்தில் இறுதித் தீர்வைக் காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!